Wednesday 14 January 2015

தை பிறந்தால் வழி பிறக்கும்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை.


தமிழர் திருநாள்
                தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள். தமிழர்கள் இருக்குமிடமெல்லாம் பொங்கல் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். மலேசியா,இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

தோற்றம்
           பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது இந்த பண்டிகை ஒன்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள். 3 நாள் விழா... பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3வது நாள் மாட்டுப் பொங்கல். நமக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல் வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

போகி
         பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில், அனைவரும் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

வீட்டுப் பொங்கல்
          2வது நாளான பொங்கல், விசேஷமானது. தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும்போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

மாட்டுப் பொங்கல்
          3வது நாள் விழா மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கள் விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூச்சி, நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின்போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள். பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இந்த இடத்தில்தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். 

காணும் பொங்கல்
          இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதுதவிர நான்காவது நாள் காணும் பொங்கலாக வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. 

கரும்பு-ஜல்லிக்கட்டு-பொங்கல்
           

பொங்கல் பண்டிகையின் மூன்று முக்கிய அம்சங்கள், கரும்பு, ஜல்லிக்கட்டு, இனிப்புப் பொங்கல்தான். இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது. கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின்போதுதான் செம கிராக்கி. இன்று முழுவதும் கரும்பு சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல பொங்கல் பண்டிகையின்போது கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் விசேஷமானவை. அலங்காநல்லூர், பாலமேடு, காஞ்சரம்பேட்டை ஆகியவை ஜல்லிக்கட்டுக்கு பெயர் போனவை. இதில் அலங்காநல்லூர் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு களமாகும். 

தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். 

Saturday 10 January 2015

திருமணப் பொருத்தம்

12 வகையான திருமணப் பொருத்தங்கள்





தினப் பொருத்தம் : 

மணமக்களின் ஆயுள் ஆரோக்கியம் இவை இரண்டையும் குறிப்பிடுவது. இது முக்கியம்.
கணப்பொருத்தம் :

இது குணநலன் பண்பு நலனைக் குறிக்கும் இது மூன்று வகை தேவகணம் , மனித கணம் , இராட்சஷ கணம். 27 நட்சத்திரங்களை  முன்று பிரிவாகப் பிரித்து இன்ன நட்சத்திரத்தில் பிறந்தவர் இன்ன கணம் என்று முனிவர்கள் வகுத்துள்ளார்கள். இது முக்கியம். குண நலம் வாழ்விற்கு எத்துணை அவசியம் என்பது நீங்கள் அறிவீர்கள். 


மகேந்திரப் பொருத்தம் :

பொருளாதார வளமாக அமைந்திட இப் பொருத்தம் வேண்டும்.
ஸ்திரீ தீர்க்கம் :

மணமகள் தீர்க்க சுமங்கலியாய் வாழ்ந்து சுமங்கலியாயாகவே வாழ்வு நிறைவு பெறுவாள் என்பதாகும்.
யோனிப் பொருத்தம் :

இது மிக முக்கியமானது. பெரும்பான்மையான மனிதர்கள் உடல் தேவையே வாழ்வு என மயங்குகின்றனர். உடல் தேவையைப் பூர்த்தி செய்ய இப் பொருத்தம் வேண்டும். வேறு ஏதோ குறிக்கோளுக்காக இந்த வாழ்வை இறையருள் தந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள மனிதனை இழுக்கும் ஒரு மாயப் பொறி என்பதனை அனுபவஸ்தர்கள் அறிவார்கள். எனினும் உடலுடன் கூடிய வாழ்வில் தான் குறிக்கோளை அடைய முடியும். வாலிபக் காலத்தில் உடலில் கட்டளைக்கு மனக் ஒத்துழைத்து செயற்படும். அறிவு ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும். சில காலம் சென்ற பின் இயற்கைச் சட்டப்படி உடல் தளரும் ஞானம் பிறக்கும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பார். கடந்த கால வாழ்வை எண்ணி கலி விரக்கம் கொள்வார். வாழ்வில் இளமையில் பிழையும் நடுப் பகுதில் போராட்டமும் முதுமையில் கடந்த கால வாழ்வை எண்ணி கழிவிரக்கம் கொள்வதுதான் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாக இருக்கிறது. விதிவிலக்காக தற்சோதனை செய்து வாழ்வின் குறிக்கோளை உணர்ந்து மரணமில்லாத வாழ்வை அடைந்தவர் பலருண்டு.பல்லாயிரக்கான மானிடரின் தனிப்பட்ட வாழ்வை அறியும் சூழ்நிலையில் என்பணி அமைந்தது தான் காரணம். எனவே மனிதன் மனிதப் பண்போடு பிற்காலத்தில் வாழ்ந்திட இப்பொருத்தம் துணை செய்யும். எனவே இது முக்கியம்.
இராசிப் பொருத்தம் :

இது வம்ஸ விருத்திக்காக. இது முக்கியம்.
இராசி அதிபதி பொருத்தம் :

சந்ததிகள் விருத்திக்காகவும் ஒருவர்க்கொருவர் நேசமுடன் வாழ வழி வகுப்பதற்காகவும் இது உதவும்.
வசியப் பொருத்தம் :

மணமக்களின் நேச வாழ்விற்காக
ரஜ்ஜிப்பொருத்தம் :

இது உயிர்நாடி போன்ற பொருத்தமாகும். வாழ்வில் முக்கியமான ஆயுள் புத்தோஷம் பிரயாணத்தில் தீமைக் பொருள் இழப்பு இவைகளைப் குறிப்பிடுவது. இதற்கு தீர்க்க சுமங்கலிப் பொருத்தம் என்று பெயரும் உண்டு இப்பொருத்தம் இல்லை எனில் மனம் முடிக்கக் கூடாது. இது மிக முக்கியம்.
வேதைப் பொருத்தம் :

துக்கத்தை நீக்கக்கூடிய பொருத்தம்.
நாடிப் பொருத்தம் :

இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
விருட்சப் பொருத்தம் :

ஆண், பெண் இருவரில் யாருக்காவது பால் மரமாக இருந்தால் புத்திர பாக்கியம் உண்டு.

இந்த 12 பொருத்தங்களையும் சரிபார்த்து இன்ன நட்சத்திரப் பெண்ணிற்கு இன்ன நட்சத்திர வரன் இத்தனை பொருத்தங்கள் அமைகின்றன என்றும் பொருத்தம் உண்டு அல்லது இல்லை என்று அறியலாம் .

திருமணம்--ஜாதகப் பொருத்தம்


                    திருமணத்துக்கு ஜாதகப் பொருத்தம் அவசியம்தானா?




              தாய் – தந்தை வேறு, பழக்கவழக்கங்கள் வேறு, செயல்பாடுகள், எண்ணம், கலாசாரம் எல்லாமே வேறு. இத்தனை வேறுபாடுகளோடு கூடிய ஆணும், பெண்ணும் கல்யாணம் செய்து கொள்வது என்று வருகிறபோது, அது சரியானபடி வருமா? இத்தனை வேறுபாடுகளையும் மீறி தம்பதிகளின் வாழ்கை கடைசிவரை முழு அமைதியோடும் அமையுமா? இதையெல்லாம் அளக்க விஞ்ஞானத்தில் எந்த ஒரு கருவியும் கிடையாது. அதனால் நீங்கள் நம்மூர் சிந்தனைக்குத்தான் வரவேண்டும். ஜாதகம் அதற்குப் பயன்படும்.
             எப்படி என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு என்ன தேவை? வாழ்கையில் மகிழ்ச்சி தேவை. அந்த மகிழ்ச்சியை கொடுப்பது மனசு. அந்த மனம் உங்கள் இருவருக்கும் இருக்கிறது. அந்த மனசு ஒருத்தருக்கொருத்தர் விடுக்கொடுக்கிற மாதிரி இருக்கிறதா? ஒரு இடையூறு வரும் சந்தர்ப்பத்தில் நீக்குப்போக்காகச் செயல்படும். நடைமுறை இருவர் மனதிலும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
              மனம்தான் இரண்டு. ஆனால், செயல்பாடு ஒன்றாக இருக்கவேண்டும். அப்படி அமைந்தால்தான் வாழ்கையில் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் நன்மைகளை எட்ட முடியும். இந்தமாதிரி இருக்கிறதா என்று சொல்வதற்குத்தான் ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தீர்மானித்துக் கொள்வது உங்கள் விருப்பம்.
             திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. 
             சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து. 
அவை :
  • தினப்பொருத்தம்
  • கனபோருத்தம்
  • யோனிப்போருத்தம்
  • ராசிப்போருத்தம்
  • ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.  



Friday 2 January 2015

புத்தாண்டு பலன்கள் 2015


 ஆண்டு பலன்கள் 2015





                                                          மேஷம்  

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

வாக்கு சாதுர்யமும், வசீகர பேச்சுத்திறனும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த 2015-ஆம் ஆண்டில் சனி அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவானும் சுக  ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வாழ்க்கையில் எவ்வளவோ சாதனைகளைச் செய்துவிட்ட உங்களுக்கு அஷ்டமச் சனிக் காலம் என்பது ஒரு பெரிய பொருட்டேயில்லை. தேவைக்கேற்றபடி பணவரவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் அளவிற்கு உங்களுக்குத் திறமையுண்டு. குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளதால் பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் கூட்டுத் தொழிலும் மேன்மையடையும். கடன்களையும் படிப்படியாகக் குறைப்பீர்கள். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடையலாம்.

ஜனவரி மாத ராசி பலன்கள்


மேஷம்(அஸ்வினி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்)







நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6ல் இராகு 11ல் செவ்வாய், சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றி விடுவீர்கள்.பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும்.


பரிகாரம். விநாயகரை வழிபடுவது சனிக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16.01.2015 அதிகாலை 02.42 மணி முதல் 18.01.2015 காலை 07.33 மணி வரை.